Thursday, February 20, 2014

முதிர் காதல்

உலுத்து போன உடலிலும் ,
பழுத்து போன வயதிலும்,
சலித்து போகாம சுவைக்குதே,
கொழுத்து போன நம் காதல்!

கண்ணு சரியா தெரியலைனு ,
கண்ணாடிய தேடுவேன் !
தேடிபிடிச்சி நீ தந்தா,உன்
தலையில உள்ள நரையெல்லாம்,
தெளிவா பாத்து நா ரசிப்பேன்!

ஏங்கேனு நீ அழைப்ப ,
தூங்குவது போல நா நடிப்பேன் ,
காலார நீ நடந்து ,காதருகே நீ வந்தா
கன்னத்தில செல்லகடி நா கடிப்பேன் !

கைத்தடி என்ற ஒன்றை ,எந்த
கயவன் கண்டுபுடிச்சானுனு,
கைய்ய புடிச்சி நீ கேட்ட!
அந்த ஒத்தசொல் என்ன செய்ததடி?
உள்ளம் கொள்ளையடித்து,
உன்னிடம் ஆனது கைதடி !

ஒன்னுக்குள் ஒன்னா வாழ்ந்துட்டோம்,
மண்ணுக்குள்ள போகும் போதும் ,
மறந்துக்கூட பிரிக்காம ,
இறந்து போன இரு சடலத்த,
இருக்கமா புதைக்க சொல்லுவோம்!
மறு ஜென்மம் ஒன்றிருந்தா,அதிலும்கூட
நெருக்கமா நாம் இருப்போம் !

-Siva

No comments:

Post a Comment