வலைத்தளத்தில் சிலந்திப் போல்
வலை விரித்து காத்திருந்தாய்,
துள்ளி விழும் மீனாக ,
மாட்டிக்கொண்டேன் நானாக !
தப்பி ஓடும் மானாக,
துரத்தி வந்தாய் ராமனாக!
ஏனோ தானோ என் தானீக்கெல்லாம்,(selfie)
எண்ணற்ற விரும்பிகள் கொடுத்தாய்! (likes)
என் முகநூலின் முகப்பினை, (wall)
முத்ததினால் நிரப்பினாய்!
புள்ளி வைத்து என்நிலை எழுதினாலும், (status)
தன்நிலை மறந்து பகிர்ந்தாய்!
தூசி படும் என்று சொல்லி,
துப்பட்டாவில் முகம் மூடி,
ஊரு கண்ணு படமால்,
உன்னை பார்க்க ஓடி வந்தேன்!
நீ பேசி போன வார்த்தையை ,
ஒற்றை வரி கவிதை என்றே ,
உள்ளுக்குள் வாசித்து நின்றேன்!
உன் முகநூலை மட்டும் படித்து,
ஆனேன் பெண் பட்டதாரி,
உன் அகநூலின் முரண் அறிந்து,
ஆனேனின்று புண் பட்டதாரி!
நகம் போலென்னை நறுக்கிய பின்னும்,
யுகம் யுகமாய் உன் நினைவுகள் ,
உலக யுத்தம் செய்கிறதே!
ஓர் அகதியை போல் என்னிதயம்,
உன் தேசம் வர துடிக்கிறதே!
மூடி வைத்து நெஞ்சில் மறைக்க
தேடி வந்த காதல் இருக்கு,
தாடி வைத்து சோகம் காட்ட,
ஆண்கள் போல எனக்கென்ன இருக்கு?
வீணென்று நீ வீசிய பின்னும்,
ஊண் சுமக்கும் இந்த உடலின்,
உயிரென்றும் உன்னருகில் இருக்கு!
-Siva