Tuesday, December 16, 2014

குழந்தைத் தொழிலாளர்

கற்பவை கற்கும் முன்,
நின்றோம் பள்ளியை விட்டு!
அற்பவை பணம் ஆயினும், 
சென்றோம் ஆலை தொட்டு!
சொற்பவை கூழ் ஆயினும்,
தின்றோம் பாடு பட்டு!
ஏற்பவை எம் விதி என்று,
சென்றோம் கண்ணீர் விட்டு!
வலை வீசி வறுமை,
வலு போட்டு இழுக்க,
கவலையிலே மாட்டின,
குட்டி மீனு நாங்க!
விலை பேசி நாங்கள்,
விற்று விட்ட கல்வி, இப்போ
தொலைதூரம் தாங்க!
தட்டாம் பூச்சி பிடித்து,
நிறம் மாறிய கைகள்,
உளியை பிடித்து இன்று ,
உள்ளங்கை சிவப்பானதே!
பட்டம் பறக்க விட்டு,
பார்த்து ரசித்த கண்கள்,
தீப்பொறி தீண்டி தீண்டி ,
தினம் சருகாய் போனதே!
சாலையின் புழுதியை,
சந்தனமாய் பூசினோம்!
சோலையின் முட்களுடனும்,
சந்தோஷமாய் பேசினோம்!
வேலை தேடி ஆலை சென்ற,
வேதனையாய் அந்த நொடி,
பாலைவனமாய் பாழானோம்!!
- Siva

No comments:

Post a Comment